குடும்ப பெருமையை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது; காங்கிரசுக்கு பெரிய அறுவை சிகிச்சை தேவை; ஜிதின் பிரசாதா விலகிய நிலையில் வீரப்ப மொய்லி பரபரப்பு பேட்டி


குடும்ப பெருமையை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது; காங்கிரசுக்கு பெரிய அறுவை சிகிச்சை தேவை; ஜிதின் பிரசாதா விலகிய நிலையில் வீரப்ப மொய்லி பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2021 6:46 PM GMT (Updated: 10 Jun 2021 6:46 PM GMT)

காங்கிரசுக்கு உடனடியாக மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. குடும்ப பெருமையை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது என்று வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

23 தலைவர்களில் ஒருவர்

உத்தரபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஜிதின் பிரசாதா, நேற்று முன்தினம் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தார். இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியுமான வீரப்ப மொய்லி நேற்று ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். இவர், கட்சியை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்று கட்சித்தலைமைக்கு கடந்த ஆண்டு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவர் ஆவார். இருப்பினும், உடனே சோனியா காந்தியின் தலைமைக்கு ஆதரவு தெரிவித்து விட்டார்.

திறமையற்றவர்

வீரப்ப மொய்லி தனது பேட்டியில் கூறியதாவது:-

ஜிதின் பிரசாதாவுக்கு கொள்கை உறுதிப்பாட்டை விட தனிப்பட்ட நோக்கங்கள்தான் முக்கியம். அவர் மீது ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது. அவரை உத்தரபிரதேசத்தின் இளம் தலைவராக முன்னிறுத்தினோம். ஆனால், அவர் அங்கு எந்த முத்திரையும் பதிக்கவில்லை. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.அவரை மேற்கு வங்காளத்தின் பொறுப்பாளராக நியமித்தோம். ஆனால், அங்கு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பூஜ்யம் வாங்கியது. அவர் திறமையற்றவர் என்று நிரூபணமாகி விட்டது.கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தோல்வியை தொடர்ந்து, காங்கிரசுக்கு மிகப்பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது என்று சொன்னேன். அதை செய்யாமல் தாமதித்து விட்டோம். தள்ளிப்போடாமல், இப்போதே பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

மோடியை தோற்கடிக்கலாம்

குடும்ப பெருமையை மட்டுமே சார்ந்து இருக்கக்கூடாது. கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். திறமையான நபர்களை உரிய பொறுப்புகளில் நியமிக்க வேண்டும்.பிரதமர் மோடி ஆடும் போட்டி அரசியலை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மோடி ஒன்றும் தோற்கடிக்க முடியாதவர் அல்ல. கட்சியை சீரமைத்து வழிக்கு கொண்டு வந்தால், மோடியை வீழ்த்தி விடலாம்.அடுத்த ஆண்டு 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அடுத்து, 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வந்து விடும். எனவே, 7 மாநில தேர்தல்களில் நன்றாக செயல்படாவிட்டால், நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது சிக்கலாகி விடும்.

இளைஞர்களுக்கு பதவி

முக்கிய பொறுப்புகளுக்கு தகுதியற்றவர்களை நியமிக்கக்கூடாது. ஒருவரை நியமிக்கும்போது, அவரது கடந்த காலம், கொள்கை உறுதிப்பாடு, திறமை, அனுபவம் ஆகியவற்றை கவனிக்க வேண்டும். இளைஞர்களை முக்கிய பதவிகளில் அமர்த்த வேண்டும்.காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்தாலும், தலைமை பதவிக்கு காலியிடம் இல்லை. அவர் கட்சியில் பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story