சிவசேனா நம்பகமான கட்சி; மராட்டிய கூட்டணி அரசு முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும்: சரத்பவார் நம்பிக்கை


சிவசேனா நம்பகமான கட்சி; மராட்டிய கூட்டணி அரசு முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும்: சரத்பவார் நம்பிக்கை
x
தினத்தந்தி 10 Jun 2021 9:10 PM GMT (Updated: 10 Jun 2021 9:10 PM GMT)

மராட்டியத்தில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி அரசு முழு ஆட்சிகாலத்தையும் நிறைவு செய்யும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கூட்டணி முறிவு
மராட்டியத்தில் கடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதல்-மந்திரி பதவிக்கான போட்டியால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி முறிந்தது. இதை தொடர்ந்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் 
கட்சிகளுடன் இணைந்து மராட்டியத்தில் ஆட்சியை கைப்பற்றியது. இந்தநிலையில் சமீபத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் டெல்லி சென்ற முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை பிரதமர் நரேந்திர மோடி தனியாகவும் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களுக்கு வித்திட்டுள்ளது. இதனால் ஆளும் கூட்டணி முறிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 22-வது ஆண்டு தொடக்க விழாவில் பேசிய கட்சியின் நிறுவனர் சரத்பவார் இந்த அரசு முழு ஆட்சி காலத்தையும் நிறைவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சிவசேனா நம்பிக்கையான கட்சி

மராட்டிய அரசு எவ்வளவு நாள் நீடிக்கும் என்ற சந்தேகம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் சிவசேனா நம்பக்கூடிய ஒரு கட்சி. இந்த அரசு அதன் முழு ஆட்சிகாலத்தையும் நிறைவு செய்யும். மேலும் அடுத்து மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களிலும் சிறப்பாக செயல்படும்.வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட கட்சிகளை உள்ளடக்கிய ஒரு அரசாங்கத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நாங்கள் இதுவரை ஒன்றிணைந்து பணியாற்றாததால் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என்று ஒருபோதும் நினைத்தது கிடையாது.ஆனால் கொரோனா தொற்று பரவலின் போதும் 3 கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்ட அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story