கொரோனாவை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது - பெண் டைரக்டர் சர்ச்சை பேச்சு


கொரோனாவை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது - பெண் டைரக்டர் சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 11 Jun 2021 5:51 AM GMT (Updated: 11 Jun 2021 5:51 AM GMT)

கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்று கூறிய பெண் டைரக்டர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

இந்திய யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவும் ஒன்று. மொத்தம் 36 தீவுக்கூட்டங்களை லட்சத்தீவுகள் உள்ளடக்கியுள்ளது. இதில் 10 தீவுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். 11-வது தீவில் வணிக பயன்பாட்டிற்காக ஓட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக ப்ரபுல் ஹடா படேல் செயல்பட்டுவருகிறார். ப்ரபுல் ஹடா படேல் தலைமையிலான நிர்வாகம் லட்சத்தீவில் பல்வேறு சட்டத்திருத்தங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடைவிதிக்கவும், மது அருந்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், சட்டவிரோதமாக மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசைகளை அப்புறப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட உள்ளது. 

இந்த நடவடிக்கைகள் லட்சத்தீவுகளில் சுற்றுலாத்துறையை மேற்படுத்த எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் வகையில் சமூக எதிர்ப்பு தடுப்பு சட்டமும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும்போது அவர்களின் படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் பயணிப்பார் என தெரிவிக்கப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

லட்சத்தீவுகளில் பெரும்பான்மை மக்கள் தொகையாக இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில் நிர்வாகத்தின் சீர்திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பர்புல் ஹடா படேலை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது.

இந்த விவகாரம் லட்சத்தீவுகளுக்கு அருகில் உள்ள கேரள மாநிலத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தினமும் விவாதங்களும் நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், லட்சத்தீவு விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள பிரபல செய்தி தொலைக்காட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவாதம் ஒன்று நடைபெற்றது. அந்த விவாத நிகழ்ச்சியில் லட்சத்தீவுகளில் ஒன்றான ஷட்லட் தீவை சேர்ந்த சேர்ந்த பிரபல பெண் டைரக்டரும், நடிகையும், சமூகசெயற்பாட்டாளருமான ஆஷா சுல்தானா பங்கேற்றார்.

கேரளாவில் வசித்துவரும் ஆஷா சுல்தானா விவாதத்தின்போது, கொரோனா வைரசை லட்சத்தீவு மக்களுக்கு எதிராக உயிரி ஆயுதமாக (Bio Weapon) மத்திய அரசு பயன்படுத்துகிறது. 

பர்புல் ஹடா படேலை மத்திய அரசு உயிரி ஆயுதமாக பயன்படுத்துகிறது என கூறினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ஆஷா சுல்தானா மீது லட்சத்தீவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து வெறுப்புணர்வை தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கேரளாவிலும் ஆஷா சுல்தானா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆஷா சுல்தானா விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

Next Story