இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 91 ஆயிரமாக சரிவு; 3,403 பேர் உயிரிழப்பு


இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 91 ஆயிரமாக சரிவு; 3,403 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 8:51 PM GMT (Updated: 11 Jun 2021 8:51 PM GMT)

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 91 ஆயிரமாக சரிவு அடைந்துள்ளது. 3,403 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர்.

தினமும் சரிவு
இந்தியாவில் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை தினந்தோறும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்றும் தொடர்ந்து 4-வது நாளாக தினசரி பாதிப்பு 1 லட்சத்துக்குள் அடங்கியது. நேற்று முன்தினம் 94 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் சரிவு ஏற்பட்டது. காலை 8 மணியுடன் முடிந்த ஒரு நாளில் 91 ஆயிரத்து 702 பேர் மட்டுமே கொரோனா தாக்குதலுக்கு ஆளானார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 92 லட்சத்து 74 ஆயிரத்து 823 ஆக அதிகரித்துள்ளது.

பாதிப்பு விகிதம் வீழ்ச்சி
நேற்று முன்தினம் நாடெங்கும் 20 லட்சத்து 44 ஆயிரத்து 131 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் பாதிப்பு விகிதம் 4.49 சதவீதமாக பதிவாகி இருக்கிறது. தொடர்ந்து 18-வது நாளாக தினசரி பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்குள் அடங்கி உள்ளது. வாராந்திர பாதிப்பு விகிதமும் 5.14 சதவீதமாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

3,403 பேர் பலி
நேற்று நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 3,403 பேர் பலியாகினர். மராட்டியத்தில் அதிகபட்சமாக 1,915 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 63 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 1.24 சதவீதம் ஆகும். நேற்று அந்தமான் நிகோபார், தத்ரா நகர்ஹவேலி டாமன் டையு, லட்சத்தீவு ஆகிய 3 யூனியன் பிரதேசங்களும் கொரோனா உயிரிழப்பில் இருந்து தப்பி உள்ளன.

29-வது நாளாக மீட்பு அதிகம்
தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோரை விட நாளும் அந்த தொற்றின் பிடியில் இருந்து மீட்கப்படுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று 29-வது நாளாக இதைக் காண முடிந்தது. 91 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்ட 
நிலையில், 1 லட்சத்து 24 ஆயிரத்து 580 பேர் கொரோனா பிடியில் இருந்து மீட்கப்பட்டு வெற்றிகரமாக வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில்தான் நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொரோனா பிடியில் இருந்து 
மீண்டிருக்கிறார்கள். இதுவரை நாடு முழுவதும் 2 கோடியே 77 லட்சத்து 90 ஆயிரத்து 73 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா மீட்பு விகிதம் 94.93 சதவீதம் ஆகும்.

11.21 லட்சம் பேர் சிகிச்சை
கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் நாளுக்கு நாள் குறைந்து வருகிறார்கள். நேற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 281 குறைந்தது. இதன் மூலம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் 11 லட்சத்து 21 ஆயிரத்து 
671 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இது மொத்த பாதிப்பில் 3.83 சதவீதம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினமும் பாதிப்பு குறைந்து வருவதும், குணம் அடைவோர் அதிகரிப்பதும், சிகிச்சை 
பெறுவோர் எண்ணிக்கை சரிவதும், கொரோனா தொற்றின் 2-வது அலை விரைவில் வீழ்வது உறுதி என்பதையே காட்டுகிறது.

Next Story