கேரளாவில் இன்றும், நாளையும் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு
கேரளாவில் இன்றும், நாளையும் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடு அமல்படுத்தப்படுகிறது. அரசு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் 16-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது சராசரி பாதிப்பு 14 சதவீதமாக உள்ளது. தொற்று விகிதம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் ஊரடங்கில் லேசான தளர்வு அமல்படுத்தப்பட்டது.
இதையொட்டி நீண்ட தூர பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்பட அத்தியாவசிய நிறுவனங்கள், கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், நேற்று கட்டுப்பாடு இல்லா தளர்வு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கடைவீதிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் எங்கும் கடைபிடிக்கப்பட வில்லை.
இந்த நிலையில் கேரளாவில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கூடுதல் கட்டுப்பாடுகளுடன் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்து உள் ளது. அதாவது மூன்றடுக்கு ஊரடங்குக்கு நிகராக தீவிர கட்டுப்பாடுகள் இருக்கும். இதையொட்டி அரசு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.
அதே நேரத்தில் பால், பத்திரிகை வினியோகத்திற்கு தடையில்லை. ஓட்டல்களில் பார்சல் இல்லை. ஆனால் ஆன்லைன் டெலிவரி நடத்தலாம். இந்த 2 நாட்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். அரசு, தனியார் அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோர் தகுந்த அடையாள அட்டைகளை காண்பித்து பணிக்கு செல்லலாம். தேவையில்லாமல் ஊர் சுற்றுகிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story