21-ந் தேதி நடைமுறைக்கு வரும் கொள்கையில் “தடுப்பூசி கொள்முதல் பற்றி தெளிவு இல்லை; சரியான வழிகாட்டுதல்கள் தேவை”; மத்திய அரசுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் கோரிக்கை


21-ந் தேதி நடைமுறைக்கு வரும் கொள்கையில் “தடுப்பூசி கொள்முதல் பற்றி தெளிவு இல்லை; சரியான வழிகாட்டுதல்கள் தேவை”; மத்திய அரசுக்கு தனியார் ஆஸ்பத்திரிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Jun 2021 7:24 PM GMT (Updated: 13 Jun 2021 7:24 PM GMT)

புதிய தடுப்பூசி கொள்கையில், தனியார் ஆஸ்பத்திரிகள் தடுப்பூசி வாங்குவது பற்றி தெளிவு இல்லை என்றும், சரியான வழிகாட்டுதல்கள் தேவை என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

புதிய தடுப்பூசி கொள்கை

பிரதமர் மோடி கடந்த 7-ந் தேதி டெலிவிஷனில் தோன்றி பேசினார். அப்போது அவர், “18 வயதான அனைவருக்கும் இலசமாக தடுப்பூசி போடப்படும். உற்பத்தியாகும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசே கொள்முதல் செய்யும். தனியார் ஆஸ்பத்திரிகள் 25 சதவீத தடுப்பூசியை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு போடலாம்” என அறிவித்தார். “இது 21-ந் தேதி முதல் அமலுக்கு வரும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வழிகாட்டும் நெறிமுறை வெளியிடப்பட்டது.அதில், “பெரிய மற்றும் சிறிய தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் பிராந்திய சமநிலைக்கு இடையில், சமமான வினியோகத்தை கருத்தில் கொண்டு, தனியார் ஆஸ்பத்திரிகளின் தடுப்பூசி கோரிக்கையை மாநிலங்களும், யூனியன் 
பிரதேசங்களும் ஒருங்கிணைக்கும். அந்த கோரிக்கையின் அடிப்படையில், தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசி வினியோகத்துக்கும், அதற்கான பண பட்டுவாடாவை தேசிய சுகாதார ஆணையத்தின் மின்னணு தளத்தின் வாயிலாக செலுத்த மத்திய அரசு ஏற்பாடு செய்யும்” என அறிவிக்கப்பட்டது.

‘தெளிவு இல்லை’

இந்த நடைமுறை அமலுக்கு வர ஒரு வாரமே உள்ள நிலையில், புதிய கொள்கையின் கீழ் தடுப்பூசி வாங்குவதில் தங்களுக்கு தெளிவு இல்லை என்று கூறி தனியார் ஆஸ்பத்திரிகள் தரப்பில் சரியான வழிகாட்டுதல்களை எதிர்பார்த்து  கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுபற்றிய அவர்களின் பார்வை இது:-

எஸ்.சி.எல்.குப்தா (டெல்லி பத்ரா ஆஸ்பத்திரி மருத்துவ இயக்குனர்):-

நாங்கள் எவ்வாறு தடுப்பூசியை வாங்குவோம் என்பதில் தெளிவு இல்லை. நாங்கள் மாநில அரசு அதிகாரிகளிடம் கேட்கிறபோது, கொள்கை தெளிவாக இல்லை. 21-ந் தேதி வரை காத்திருங்கள் என்கிறார்கள். மத்திய அரசு எங்களை 
காத்திருக்க சொல்கிறது. நாங்கள் தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களை அணுகினோம். அவர்களிடமும் தடுப்பூசி கொள்முதல் முறை குறித்து தெளிவு இல்லை. இதனால் மக்களுக்கு தடுப்பூசி போடுவது தாமதம் ஆகி வருகிறது.
3-வது அலை நாட்டை தாக்கும் என்ற அச்சத்தில் முடிந்தவரையில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி போட நாங்கள் விரும்புகிறோம். மேலும், முதல் டோஸ் போட்டுக்கொண்ட பலரும், எங்கள் பணியாளர்களும் இரண்டாவது டோசுக்காக காத்திருக்கிறார்கள்.

எவ்வளவு தடுப்பூசி வழங்கப்படும்?

பி.கே. பரத்வாஜ் ( டெல்லி சரோஜ் ஆஸ்பத்திரி தலைமை செயல் இயக்குனர்):-

தனியார் ஆஸ்பத்திரிகள் தடுப்பூசி கொள்முதல் செய்வது பற்றி எதுவும் தெளிவாக கூறப்படவில்லை. ஒவ்வொரு ஆஸ்பத்திரிக்கும் எவ்வளவு தடுப்பூசிகள் வழங்கப்படும்?இதில் அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தெளிவான வழிகாட்டும் நெறிமுறைகள் வெளியிடப்பட வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு இந்த கொடிய வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடுவதில் மேலும் தாமதத்தை தவிர்க்க இயலும்.

சர்வேஷ் சரண் ஜோஷி (ராஜஸ்தான் டாக்டர்கள் சங்க தலைவர்):-

கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடமும் நாங்கள் பேசி உள்ளோம். அவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசிகளை நேரடியாக வினியோகிக்கக்கூடாது என்று அரசு சொல்லி விட்டதாக தெரிவித்தனர். இதனால் சிறிய, நடுத்தர ஆஸ்பத்திரிகள் பெரும்பாலானவை பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன.

ஜிதேந்திர சரப் (ராய்ப்பூர் சீதா நினைவு பன்னோக்கு பல் ஆஸ்பத்திரி இயக்குனர்):-

மாநில அரசு அதிகாரிகளை நாங்கள் அணுகினோம். அவர்கள், தனியார் ஆஸ்பத்திரிகள் தடுப்பூசிகளை எவ்வாறு வாங்குவது என்பதில் இனிதான் சரியான வழிமுறைகள் வரவேண்டும் என்கிறார்கள். நாங்கள் பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்துக்கு எழுதியும், பலன் இல்லை.

இவ்வாறு கூறி உள்ளனர்.

சுகாதார அமைச்சகத்துக்கு கடிதம்

இதற்கிடையே சீரம் நிறுவனத்தின் அரசு மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்களின் இயக்குனர் பிரகாஷ்குமார் சிங், மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு ஒரு கடிதம் எழுதி இருப்பதாகவும், அதில், “உங்கள் வழிகாட்டுதல்படி எந்தவொரு தனியார் ஆஸ்பத்திரியிடம் இருந்தும் அதிக ஆர்டர்களையோ, அதற்கான பணத்தையோ பெறவில்லை. தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசி சப்ளை செய்வதற்கான உங்கள் வழிநடத்துதலுக்காக காத்திருக்கிறோம்” என கூறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story