காஷ்மீரில் ஏழுமலையான் கோவிலுக்கு பூமி பூஜை; திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு


காஷ்மீரில் ஏழுமலையான் கோவிலுக்கு பூமி பூஜை; திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு
x
தினத்தந்தி 13 Jun 2021 8:08 PM GMT (Updated: 13 Jun 2021 8:08 PM GMT)

காஷ்மீரில் ரூ.33 கோடி செலவில் கட்டப்படும் ஏழுமலையான் கோவிலுக்கு பூமி பூஜை நடைபெற்றது. இந்த கோவிலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டுகிறது.

62 ஏக்கர் நிலம்

காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவில் மஜீன் கிராமத்தில் ஏழுமலையான் கோவில் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 62 ஏக்கர் நிலத்தை காஷ்மீர் அரசு 40 ஆண்டு குத்தகைக்கு வழங்கி உள்ளது.அந்த நிலத்தில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்கா கலந்து கொண்டார். அடிக்கல் நாட்டியதை குறிக்கும் கல்வெட்டை அவர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கவர்னர் மனோஜ் சின்கா பேசியதாவது:-

மாதா வைஷ்ணோ தேவி மண்ணில் ஏழுமலையான் கோவில் அமைய வேண்டும் என்ற காஷ்மீர் மற்றும் வடஇந்திய மக்களின் நீண்டநாள் ஆசையை நிறைவேற்றிய தேவஸ்தானத்துக்கு நன்றி. இந்த நாள், காஷ்மீருக்கு வரலாற்று சிறப்புமிக்க, பெருமைக்குரிய நாள். கோவில் கட்டி முடித்த பிறகு, இது ஆன்மிக சுற்றுலா தலமாக உருவெடுக்கும். முக்கிய பூசாரிகள், மேற்பார்வையாளர்களை தவிர மற்றவர்கள் உள்ளூர் மக்களாக இருப்பார்கள்.

இவ்வாறு அவர் பேசினாா்.

18 மாதங்களில் பணி முடிவடையும்

மத்திய மந்திரிகள் ஜிதேந்திர சிங், கிஷன் ரெட்டி, திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ரூ.33 கோடியே 22 லட்சம் செலவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படுகிறது. 18 மாதங்களில் கட்டுமான பணி நிறைவடைகிறது. வேதபாடசாலை, விடுதி, திருமண மண்டபம், பக்தர்கள் தங்குமிடம், ஊழியர் குடியிருப்பு, வாகன நிறுத்துமிடம் ஆகியவையும் அந்த வளாகத்தில் அமைய உள்ளன.


Next Story