கொரோனா 2வது அலையில் கர்ப்பிணிகள் அதிகம் பாதிப்பு: ஐ.சி.எம்.ஆர். அறிக்கை


கொரோனா 2வது அலையில் கர்ப்பிணிகள் அதிகம் பாதிப்பு:  ஐ.சி.எம்.ஆர். அறிக்கை
x
தினத்தந்தி 17 Jun 2021 3:51 AM GMT (Updated: 17 Jun 2021 3:51 AM GMT)

நாட்டில் கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஐ.சி.எம்.ஆர். அறிக்கை தெரிவிக்கின்றது.


புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை விட 2வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன.  கடந்த ஏப்ரலில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை லட்சக்கணக்கில் பதிவாகி வந்த நிலையில், ஒரு நாள் பாதிப்பு 4 லட்சம் கடந்து உச்சம் தொட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இதன்படி, இதுவரை 387 கர்ப்பிணிகளுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  அதில் 111 கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்தது.  சதவீத அடிப்படையில் 28.7% பேருக்கு தொற்று அறிகுறிகள் அதிகமாக இருந்தது என்றும் கூறப்பட்டு உள்ளது.

முதல் அலை காலகட்டத்தில் 1,143 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும்,
இவர்களில் 162 பெண்களுக்கு மட்டுமே, அதாவது 14.2 சதவீத பெண்களுக்கு தொற்று அறிகுறிகள் அதிகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், முதல் அலையில் கர்ப்பிணி பெண்களின் இறப்பு சதவீதம் 0.7 ஆக இருந்ததாகவும், 2வது அலையில் இதுவரை 22 பேர் உயிரிழந்து உள்ளதால், இறப்பு சதவிகிதம் 5.7 ஆக  பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இரண்டு அலைகளிலும் இதுவரை ஆயிரத்து 530 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டு, 30 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story