மராட்டியம்: கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு 729 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு இதுவரை 729 பேர் உயிரிழந்து உள்ளனர்.
புனே,
இந்தியாவில் கொரோனா 2வது அலையில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. சமீப வாரங்களாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், கொரோனா பாதிப்பு ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு, கருப்பு பூஞ்சை நோய் தொற்றும் ஏற்பட்டு வருகிறது.
கொரோனா சிகிச்சைக்கு ஸ்டீராய்டு மருந்துகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட கூடிய சாத்தியம் அதிகமுள்ளது என கூறப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு காணப்படுகிறது.
இதனை முன்னிட்டு ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, குஜராத், பஞ்சாப், அரியானா, கர்நாடகா, பீகார் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இதனை தொற்று நோய் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட தொற்று நோயாக அறிவித்து உள்ளது.
மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 7,998 பேர் (கடந்த வாரம் 7,395) பாதிக்கப்பட்டு உள்ளனர். 729 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,755 பேர் சிகிச்சை முடிந்து இதுவரை குணமடைந்து சென்றுள்ளனர். 4,398 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவற்றில் நாக்பூர் (104), புனே (90), நாசிக் (53) மற்றும் அவுரங்காபாத் (75) ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதேபோன்று புனே (1,187), நாக்பூர் (1,296), அவுரங்காபாத் (940) மற்றும் நாசிக் (529) ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.
மராட்டியத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு கடந்த வாரம் உயிரிழப்பு எண்ணிக்கை 644 ஆக இருந்தது. ஒரு வாரத்தில் இந்த எண்ணிக்கையானது 80 வரை உயர்ந்து, மொத்த உயிரிழப்பு 729 ஆக உள்ளது.
Related Tags :
Next Story