டெல்லி விமான நிலையத்தில் கூச்சல், குழப்பம் செய்த பயணி கைது
டெல்லி விமான நிலையத்தில் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை ஆவணமின்றி கூச்சல், குழப்பம் செய்த பயணி கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் விஸ்தாரா விமானத்தில் ஏற இருந்த பயணியிடம் ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்ததற்கான சான்றாவணங்கள் எதுவும் இல்லை.
மும்பை செல்ல இருந்த அவரிடம், விமானத்தில் ஏறுவதற்கு முன் அதிகாரிகள் கொரோனா பரிசோதனை சான்றிதழை கேட்டுள்ளனர். வேறு மாநில விமான பயணிகள் தங்களுடன் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழ்களை கொண்டு வருவது மராட்டியத்தில் கட்டாயம்.
ஆனால், சான்றிதழ் இல்லாத நிலையில், அவரை விமானத்தில் ஏற அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால், அவருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே காரசார வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர் அவரை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கைது செய்து டெல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவர் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஜாமீன் வழங்க கூடிய அளவிலான குற்றம் என்பதனால், அந்த நபர் பிணை தொகை செலுத்தினார். இதனால், போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும், நீதிமன்ற தீர்ப்புக்காக அவர் கோர்ட்டில் ஒப்படைக்கப்படுவார்.
Related Tags :
Next Story