டெல்டா பிளஸ் கொரோனா; கவலையளிக்கக் கூடியதாக வகைப்படுத்தியது மத்திய சுகாதாரத்துறை


டெல்டா பிளஸ் கொரோனா; கவலையளிக்கக் கூடியதாக வகைப்படுத்தியது மத்திய சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 22 Jun 2021 3:55 PM GMT (Updated: 22 Jun 2021 3:55 PM GMT)

இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் மாறுபாடு கொரோனா பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. இந்தியாவில் அந்த வகையில் உருமாறிய கொரோனா வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டன. முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.1’ வைரசுக்கு காப்பா என்றும், ‘பி.1.617.2’ வைரசுக்கு டெல்டா என்றும் உலக சுகாதார நிறுவனத்தால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டெல்டா வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், இந்த டெல்டா வைரஸ் உருமாறி உள்ளது. உருமாறிய டெல்டா வைரஸ், ‘டெல்டா பிளஸ்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் ‘கே417என்’பிறழ்வால் வகைப்படுத்தப்படுகிறது. இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் இதுவரை 22 பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதித்துள்ளது.

இந்த நிலையில், டெல்டா பிளஸ் கொரோனா கவலை தரக்கூடியது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  வகைப்படுத்தியுள்ளது. டெல்டா பிளஸ் கொரோனா பரவியுள்ள இடங்களில் போதுமான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.  இந்தியா உள்பட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் மாறுபாடு கொரோனா பரவியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

Next Story