நக்சலைட்டுகளின் முக்கிய தளபதி கொரோனாவால் உயிரிழப்பு


நக்சலைட்டுகளின் முக்கிய தளபதி கொரோனாவால் உயிரிழப்பு
x
தினத்தந்தி 24 Jun 2021 10:50 AM GMT (Updated: 24 Jun 2021 10:50 AM GMT)

நக்சலைட்டு அமைப்பின் முக்கிய தளபதி கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.

ராய்ப்பூர்,

இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் குழுக்களாக வாழ்ந்துவருகின்றனர். இவர்கள் போலீசார், கிராமப்புற மக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதலை நடத்தி வருகின்றனர். 

இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட சில மாநிலங்களில் காவல்துறையில் சிறப்பு போலீஸ் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியுள்ள பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு தேடுதல் வேட்டையில் ஈடுபடும் போலீசாரை குறிவைத்து நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளும் தாக்குதலில் ஈடுபட்டு வரும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையில், நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் அனைத்து தரப்பினரையும் பாதிப்பிற்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில், நக்சலைட்டுகள் குழுக்களிலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது.

இந்நிலையில், நக்சலைட்டு அமைப்பின் முக்கிய தளபதி ஹரிபூஷன் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக சத்தீஸ்கர் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். ஹரிபூஷன் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். 

இவரை பிடித்துக்கொடுப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிக்கப்பட்ட நக்சலைட்டு தளபதி ஹரிபூஷன் தெலுங்கானா-சத்தீஸ்கர் மாநில எல்லைப்பகுதியில் உள்ள பஜாபூர்-சுக்மா பகுதியில் உள்ள காட்டிற்குள் நேற்று உயிரிழந்துவிட்டதாக சத்தீஸ்கரின் பஸ்டர் மாவட்ட போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

நக்சலைட்டுகளில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களில் மருத்துவ உதவியின்றி சிலர் உயிரிழந்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story