நாட்டின் 8 மாநிலங்களில் 50% டெல்டா கொரோனா பாதிப்பு உள்ளது; என்.சி.டி.சி. அறிவிப்பு


நாட்டின் 8 மாநிலங்களில் 50% டெல்டா கொரோனா பாதிப்பு உள்ளது; என்.சி.டி.சி. அறிவிப்பு
x
தினத்தந்தி 25 Jun 2021 11:51 AM GMT (Updated: 25 Jun 2021 11:51 AM GMT)

நாட்டின் 8 மாநிலங்களில் 50% டெல்டா கொரோனா பாதிப்பு உள்ளது என தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குனர் அறிவித்துள்ளார்.



புதுடெல்லி,

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, 2வது அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.  இந்த நிலையில் திடீரென ஒரு சில நாடுகளில் டெல்டா பிளஸ் என்ற உருமாறிய கொரோனா வகை பரவி வருகிறது என கூறப்பட்டது.

அமெரிக்காவில் டெல்டா ப்ளஸ் வகை பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில் இரண்டே வாரத்தில் 2 மடங்காக பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.  இருப்பினும் இந்த வகை இந்தியாவில் இல்லை என்று நம்பப்பட்டு வந்தது.

எனினும், கேரளா, மத்திய பிரதேசம், தமிழகம் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  மத்திய பிரதேசம் மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்புகளால் தலா ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

இந்நிலையில், ஆந்திர பிரதேசம், டெல்லி, அரியானா, கேரளா, மராட்டியம், பஞ்சாப், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய நாட்டின் 8 மாநிலங்களில் 50%க்கும் கூடுதலான டெல்டா கொரோனா பாதிப்பு உள்ளது என தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (என்.சி.டி.சி.) இயக்குனரான மருத்துவர் எஸ்.கே. சிங் அறிவித்துள்ளார்.

இதேபோன்று, நாடு முழுவதும் இன்று வரை டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு 48 பேருக்கு ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story