விவசாய அமைப்புகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்: வேளாண் துறை மந்திரி வலியுறுத்தல்


விவசாய அமைப்புகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்: வேளாண் துறை மந்திரி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 25 Jun 2021 7:31 PM GMT (Updated: 25 Jun 2021 7:31 PM GMT)

விவசாய அமைப்புகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 6 மாதங்கள் முடிந்து 7-வது மாதத்தை தொட்டுள்ளது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே இதுவரை நடைபெற்ற அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  போராட்டம் துவங்கி 7-வது மாதம் தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் சார்பில் இன்று டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது. இதற்கிடையில் நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், விவசாயிகள் போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். 

மேலும்,  அவர் கூறுகையில், “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே விவசாய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.  நாட்டில் பெரும்பான்மை பிரிவினர் இந்த சட்டங்களுக்கு ஆதரவாக உள்ளனர். எனினும், இந்த சட்டங்களில் ஏதேனும் ஷரத்துக்கள் ஆட்சேபத்துக்குரிய வகையில் இருந்தால் மத்திய அரசு அதற்கு தீர்வு காண தயாராக உள்ளது.” என்றார். 

Next Story