பெங்களூருவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட 1,049 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு


பெங்களூருவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட 1,049 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 26 Jun 2021 7:26 PM GMT (Updated: 26 Jun 2021 7:26 PM GMT)

பெங்களூருவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட 1,049 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு உள்பட கா்நாடகத்தில் கொரோனா 2-வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. பொதுமக்களை போல போலீசாருக்கும் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு ஏற்படுவது அதிக அளவில் இருந்தது. அதன்படி, பெங்களூருவில் கொரோனா 2-வது அலையில் 1,797 போலீசார் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்.

அவர்களில் 16 பேர் தங்களது உயிரை இழந்திருந்தார்கள். அதே சமயம் 1,672 போலீசார் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளான இன்னும் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இந்த நிலையில், கொரோனா 2-வது அலையில் பாதிப்புக்கு உள்ளான பெரும்பாலான போலீசார், தடுப்பூசியை 2 முறை போட்டிருந்தும், அவர்கள் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன்படி, பெங்களூருவில் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 1,049 போலீசார் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. 

ஆனால் 2 முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட போலீசாருக்கு பெரிய அளவில் உடலில் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், காய்ச்சல், இருமல் மட்டுமே இருந்ததாகவும், தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்ததால், அவர்கள் விரைவில் குணமடைந்து பணிக்கு திரும்பி இருந்ததாகவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story