வீரர்களை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கும் பிரதமரை முதன்முறையாக இந்தியா பெற்றுள்ளது; கிரண் ரிஜிஜூ புகழாரம்
வீரர்களை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கும் பிரதமரை முதன்முறையாக இந்தியா பெற்றுள்ளது என விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்ற பின்பு, மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமை காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் இந்த நடைமுறை தொடர்கிறது. இதில், இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, மிகச்சிறந்த விளையாட்டு வீரரான மில்கா சிங்கை யாரும் மறந்திருக்க முடியாது. மில்கா சிங்கின் ஒட்டுமொத்த குடும்பமே விளையாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
நமது நாட்டின் பெரும்பாலான வீரர்கள் சிறிய நகரத்தில் இருந்து வருபவர்கள். அவர்களின் கதைகளை கேட்டால் வாழ்க்கையில் எத்தனை போராட்டங்களை சந்தித்து இருப்பார்கள் என்பது நமக்கு புரியும்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் நமது வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். திறமை, அர்ப்பணிப்பு, மன உறுதி, நேர்மை எல்லாம் சேரும்போது ஒரு சாம்பியன் உருவாகிறார்.
டோக்கியோவுக்கு செல்லும் ஒவ்வொரு வீரருக்கும் சொந்த போராட்டம் மற்றும் பல வருட உழைப்பு உள்ளன. அவர்கள் தமக்காக மட்டுமல்ல, நாட்டிற்காகவும் செல்கிறார்கள். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களை Cheer4India என்ற ஹேஷ்டேக் மூலம் ஊக்குவிப்போம் என கூறினார்.
இதுபற்றி மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பிரதமரின் மன் கி பாத் நிகழ்ச்சியை கேட்கவே மனது நிறைந்திருந்தது.
ஏனெனில், வீரர்களை தனிப்பட்ட முறையில் ஆதரிக்க கூடிய ஒரு பிரதமரை முதன்முறையாக இந்தியா பெற்றுள்ளது. வீரர்களின் நலனுக்கான ஒவ்வொரு விசயம் பற்றியும் அவர் கவனம் செலுத்துகிறார்.
இதுபோன்ற ஊக்கப்படுத்துதலை இதற்கு முன் நாம் நினைத்து பார்த்திருக்க முடியாது என புகழாரம் சூட்டி பேசியுள்ளார்.
Related Tags :
Next Story