டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் இடைக்கால குறைதீர்த்தல் அதிகாரி ராஜினாமா


டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் இடைக்கால குறைதீர்த்தல் அதிகாரி ராஜினாமா
x
தினத்தந்தி 28 Jun 2021 11:59 PM GMT (Updated: 28 Jun 2021 11:59 PM GMT)

டுவிட்டர் இந்தியா நிறுவனத்தின் இடைக்கால குறைதீர்த்தல் அதிகாரி பதவியில் இருந்து தர்மேந்திர சந்தூர் ராஜினாமா செய்துள்ளார்.

புதுடெல்லி,

சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக எழுந்து வந்தன. 

இதையடுத்து பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐ கொண்டு வந்தது.

புதிய விதிகளின் படி, புகார்கள் குறித்து விசாரிக்க இந்தியாவில் கீழ்படிதல் மற்றும் குறைதீர்த்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்  என்பவை போன்ற பல்வேறு  அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 

மத்திய அரசின் புதிய விதிகளை பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், புதிய விதிகளை டுவிட்டர் நிறுவனம் ஏற்க மறுத்து வந்தது. குறிப்பாக, கீழ்படிடல் மற்றும் குறைதீர்த்தல் அதிகாரியை நியமிக்காமல் டுவிட்டர் நிறுவனம் கால தாமதம் செய்து வந்தது.  
  
நீண்ட தாமதத்திற்கு பின்னர் குறைதீர்த்தல் அதிகாரி ஒருவரை இடைக்காலமாக டுவிட்டர் நிறுவனம் நியமித்தது. தர்மேந்திர சந்தூர் டுவிட்டர் நிறுவனத்திற்கான குறைதீர்த்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். டுவிட்டர் பயன்படுத்தும் பயனாளர்கள் எழுப்பும் புகார்கள் குறித்து விசாரிப்பதற்காக இந்த அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த அதிகாரி டுவிட்டர் நிறுவனத்திற்கும் மத்திய அரசுக்கும் இடையேயான பாலமாக செயல்படுவார் என தகவல் வெளியாகின. மத்திய அரசின் அமைப்புகள் கேட்கும் தரவுகளை இந்த அதிகாரி டுவிட்டர் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டம்-ஒழுங்கு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு கேட்கும் தரவுகளை டுவிட்டர் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத்தரவேண்டியது இந்த அதிகாரியின் பொறுப்பு ஆகும்.
 
இந்த பொறுப்பில் இடைக்கால அதிகாரியாக தர்மேந்திர சந்தூர் கடந்த 16-ம் தேதி நியமிக்கப்பட்ட நிலையில் அவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மத்திய அரசுக்கும், டுவிட்டர் நிறுவனத்திற்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story