பெங்களூருவை நாட்டிலேயே முன்மாதிரி நகரமாக மாற்ற முயற்சி - முதல் மந்திரி எடியூரப்பா பேச்சு
பெங்களூருவை உலக தரத்தில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் புதிய மரப்பூங்கா, கன்னமங்கல ஏரி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த மரப்பூங்கா, ஏரியை தொடங்கி வைத்து பேசியதாவது;-
“பெங்களூரு மகாதேவபுரா தொகுதியில் 22 ஏக்கரில் மரப்பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. பசுமை பெங்களூருவை உருவாக்க வேண்டும் என்ற அரசின் நோக்கம் இதன் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த மரப்பூங்காவில் பல்வேறு வகையான தாவரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பூங்காவால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.
நகரில் பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் பெங்களூரு நாட்டிலேயே முன்மாதிரி நகரமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம். இங்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
Related Tags :
Next Story