கொரோனாவுக்கு 4 லட்சம் பேர் பலி; அமெரிக்கா, பிரேசிலை அடுத்து 3வது இடத்தில் இந்தியா
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 லட்சம் கடந்து உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை பற்றி மத்திய குடும்பநல மற்றும் சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. இதில், புதிதாக 46,617 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 3 கோடியே 4 லட்சத்து 58 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 853 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 4 லட்சம் கடந்து உள்ளது. மொத்த பலி 4,00,312 ஆக அதிகரித்துள்ளது. இதில், மராட்டியத்தில் மட்டுமே 1 லட்சத்து 22 ஆயிரத்து 197 பேர் இறந்துள்ளனர்.
இதனால், உலக அளவில் கொரோனா பலி எண்ணிக்கையில் 4 லட்சம் கடந்த 3வது நாடாக இந்தியா உள்ளது. முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவில் 6,05,035 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை தொடர்ந்து பிரேசில் (5,20,095) 2வது இடத்தில் உள்ளது.
எனினும், கொரோனா பாதிப்புகளை விட குணமடைந்தோர் எண்ணிக்கை 50வது நாளாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 60,237 பேர் குணமடைந்து உள்ளனர். ஒட்டுமொத்த குணமடைந்தோர் விகிதம் 97.01 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story