உத்தரகாண்டில் இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம்


உத்தரகாண்டில் இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 3 July 2021 4:34 AM GMT (Updated: 3 July 2021 4:35 AM GMT)

உத்தரகாண்ட் மாநில பாஜக மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர், இன்று உத்தரகாண்ட் புறப்பட்டுள்ளார்.

டோராடூன்,

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக பாஜகவை சேர்ந்த  தீரத் சிங் ராவத் பதவி வகித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் தீரத் சிங் ராவத் முதல்வராக பொறுப்பேற்றார்.  அடுத்த ஆண்டு உத்தரகாண்ட் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்த நிலையில், தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து நேற்று அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் வந்துள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவும் உறுதி செய்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதையடுத்து, இன்று மாலை பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் புதிய முதல் மந்திரி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  உத்தரகாண்ட் மாநில பாஜக மேலிட பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர், இன்று உத்தரகாண்ட் புறப்பட்டுள்ளார். 

பதவி  விலக காரணம் என்ன?

முன்னதாக,  தீரத் சிங் ராவத் தற்போது பவுரி மக்களவைத் தொகுதி எம்.பி.யாக உள்ளார். முதல்வராக பதவியேற்ற 6 மாதங் களுக்குள் எம்எல்ஏவாகத் தேர்வு செய்யப்பட வேண்டும்.  இதன்படி பார்த்தால், வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அவர் பதவியேற்க வேண்டும். தற்போது கங்கோத்ரி தொகுதியும், ஹால்த் வானி தொகுதியும் காலியாக உள்ளன. இவற்றில் கங்கோத்ரி தொகுதியில் தீரத் சிங் ராவத்தை நிறுத்த கட்சி முடிவு செய்திருந்தது.

ஆனால் அடுத்த ஆண்டு உத்தராகண்ட் சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. பேரவையின் பதவிக்காலம் முடிவடைய ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில் சட்டப் பேரவை இடைத்தேர்தல் நடத் தப்படுவது இல்லை என்பது விதியாகும். எனவே, தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.  இதையே தீரத் சிங் ராவத்தும் சூசகமாக தெரிவித்தார். 


Next Story