ரபேல் ஒப்பந்த முறைகேடு: விசாரிக்க பிரான்சில் நீதிபதி நியமனம்


படம்:  PTI
x
படம்: PTI
தினத்தந்தி 3 July 2021 6:15 AM GMT (Updated: 3 July 2021 6:15 AM GMT)

ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரிக்க பிரான்சில் ஒரு தனி நீதிபதி நியமிக்கப்பட்டு உள்ளார்

புதுடெல்லி

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 59 கோடி ரூபாய் செலவில் 36 ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய 2016-ம் ஆண்டு இந்திய அரசு ஒப்பந்தம் செய்தது. 

அந்த ஒப்பந்தத்தின் படி பிரான்சில் இருந்து ஏற்கனவே 23 ரபேல் விமானங்களை இந்தியா பெற்றுள்ளது. 36 ரபேல் போர் விமானங்களும் 2022 ஏப்ரல் மாதத்திற்குள் இந்தியாவிடம் வழங்கப்படும் என்று பிரான்ஸ் டசால்ட் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஒப்பந்தத்துக்காக இந்தியாவை சேர்ந்த இடைத்தரகர் ஒருவருக்கு ரூ.9 கோடிக்கு மேல் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக பிரான்ஸ் நாட்டு ஆன்லைன் செய்தி நிறுவனம்  சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.

இதை தொடர்ந்து  ரபேல் போர்விமான  ஒப்பந்தத்தில் முழுமையான விசாரணை வேண்டும் என்றும் இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஒரு பொது நலன் வழக்கை விசாரித்து, 2019 நவம்பரில் அதில் எந்தத் தவறும் நடைபெறவில்லை என்று கூறியது.

இந்தியாவுக்கும் பிரான்ஸ் விமான உற்பத்தியாளர் டசால்ட்டுக்கும் இடையிலான 36 போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் நடைபெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று பிரான்ஸ் பொது வழக்கு சேவைகளின் (பி.என்.எப்) நிதிக் குற்றப்பிரிவு தெரிவித்து இருந்தது. 

மீடியாபார்ட் பத்திரிகை மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணைகள் மற்றும் அதைத் தொடர்ந்து பிரான்ஸ்  தன்னார்வ தொண்டு நிறுவனமான ஷெர்பா அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.முன்னதாக ஷெர்பா அளித்த இதேபோன்ற புகாரை பி.என்.எஃப் 2018 இல் நிராகரித்தது.

குற்றவியல் விசாரணையை ஒரு தன்னிச்சையான நீதிபதி வழிநடத்துவார் என்று மீடியாபார்ட் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது ஜனாதிபதி பதவியில் ஹாலண்ட்  இருந்தார், தற்போதைய ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஹாலண்டின் பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சராக இருந்தார்.

Next Story