உத்தர பிரதேச தேர்தல் வெற்றி; ஆதித்யநாத்துக்கே அனைத்து புகழும் சேரும்: பிரதமர் மோடி
உத்தர பிரதேச தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கான அனைத்து புகழும் யோகி ஆதித்யநாத்துக்கே சேரும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
உத்தர பிரதேசத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் 75 இடங்களில் 67 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி உள்ளது. இதுபற்றி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கூறும்போது, இதற்காக பா.ஜ.க. தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். வருகிற 2022ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் பா.ஜ.க. வெற்றி பெறும். நாங்கள் 300க்கும் கூடுதலான தொகுதிகளை கைப்பற்றுவோம் என உறுதிப்பட கூறினார்.
இந்த தேர்தல் வெற்றி பற்றி பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், வளர்ச்சி, பொது சேவை மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு பொதுமக்கள் அளித்த ஆசியே, உத்தர பிரதேச மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் பா.ஜ.க. அடைந்த இந்த வெற்றியாகும்.
இதற்கான புகழ் அனைத்தும் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் கொள்கைகள் மற்றும் கட்சி தொண்டர்களின் அயராத கடின உழைப்பு ஆகியவற்றையே சாரும். உத்தர பிரதேச அரசு மற்றும் பா.ஜ.க.வுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளார்.
உத்தர பிரதேச பா.ஜ.க. தலைவர் ஸ்வதந்திரா தேவ் சிங் கூறும்போது, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் எங்களுடைய கட்சி வெற்றி பெறும் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story