பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும்: கர்நாடக பா.ஜனதா எம்.பி
பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. தெரிவித்துள்ளார்.
சைக்கிளை பயன்படுத்த வேண்டும்
கர்நாடக மாநிலம் தாவணகெரே தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக இருப்பவர் சித்தேஷ்வர். இவர் நேற்று தாவணகெரேவுக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வை பற்றி சித்தேஷ்வரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பொதுமக்கள் சைக்கிளை பயன்படுத்த வேண்டும். சைக்கிள் பயன்படுத்துவதால் உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது. அத்துடன் சிக்கனமாது. இதன்மூலம் உடல் வலிமை பெறுவதுடன், எந்த நோயும் நம்மை அண்டாது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறையும். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர்களின் விலையை குறைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story