பா.ஜ.க.வின் கொங்குநாடு கனவு பலிக்காது; தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது: நாராயணசாமி பேட்டி


பா.ஜ.க.வின் கொங்குநாடு கனவு பலிக்காது; தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது: நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 13 July 2021 1:05 AM GMT (Updated: 13 July 2021 1:05 AM GMT)

தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது, பா.ஜ.க.வின் கொங்குநாடு கனவு பலிக்காது என்று நாராயணசாமி கூறினார்.

ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காரைக்கால் தலத்தெரு அருகில் உள்ள பாரதியார் சாலையில், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாட்டுவண்டியில் வந்து தனியார் பெட்ரோல் பங்க் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிர மணியன், காரைக்கால் மாவட்ட தலைவர் சந்திரமோகன், முன்னாள் தலைவர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர்கள், கருணாநிதி, சிவ கணேஷ், வட்டார தலைவர்கள் சுப்பையன், அரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

மோடி பதவி விலக வேண்டும்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் 130 டாலராக இருந்தபோது, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.65-க்கும், டீசல் ரூ.53-க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.350-க் கும் விற்பனை செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் கச்சா எண்ணெய் விலை பேரல் 70 டாலராக இருக்கும் நிலையில், பெட்ரோல் லிட்டர் ரூ.101-க்கும், டீசல் லிட்டர் ரூ.94-க்கும், கியாஸ் சிலிண்டர் ரூ.850-க் கும் விற்பனை செய்யப்படுவது வேதனையானது. இதன் மூலம் மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது. இந்தியாவில் இருந்துதான் நேபாளத்துக்கு பெட்ரோல் அனுப்பப்படுகிறது. அங்கு லிட்டர் ரூ.70-க்கு விற்கும்போது, இந்தியாவில் மட்டும் ஏன் இந்த உச்சக்கட்ட விலை? மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. இனியும் எரிபொருட்களின் விலையைக் குறைக்காவிட்டால், பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

பா.ஜ.க. கனவு பலிக்காது
கொரோனா 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகளை திறக்கும் முடிவை புதுச்சேரி அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.தமிழகத்தில் கொங்குநாடு பிரச்சினையை பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது. பா.ஜ.க.வால் மட்டுமல்ல, தமிழகத்தை யாராலும் பிரிக்க முடியாது. தமிழக மக்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த எண்ணம் கொண்டவர்களை தமிழ் மக்கள் தூக்கி எறிவார்கள். பா.ஜ.க. இதுபோன்ற விஷம வேலைகளில் இறங்கியுள்ளது. இது பகல் கனவாகத்தான் முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story