2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஏமாற்றப்பட்டது - நானா படோலே


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 15 July 2021 12:42 AM GMT (Updated: 15 July 2021 12:52 AM GMT)

2014-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஏமாற்றப்பட்டது என நானா படோலே கூறியுள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி செய்து வருகின்றன. கொள்கை முரண்பாடு இருந்தபோதிலும் சுமார் ஒன்றரை ஆண்டை வெற்றிகரமாக கடந்துவிட்ட இந்த கூட்டணியில் கடந்த சில நாட்களாக சலசலப்பு ஏற்பட்டு வருகிறது.
மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக புதிதாக பதவியேற்றுள்ள நானா படோலே சர்ச்சை கருத்துகளை கூறி வருகிறார்.

சமீபத்தில் மாநில அரசு உளவுதுறை மூலம் தன்னை கண்காணித்து வருவதாக தெரிவித்தார். இதனால் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் துணை முதல்-மந்திரி அஜித்பவார் குறித்தும் தாக்கி பேசினார்.
இந்தநிலையில் நானா படோலே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எதிர்க்கட்சியான பா.ஜனதாவை தாக்கும் பணியே எனக்கு வழங்கப்பட்டு உள்ளது. மகா விகாஷ் அகாடி அங்கத்தினரான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசையோ, சிவசேனாவையோ எதிர்க்கும் பணி அல்ல. 
2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள்(காங்கிரஸ்) ஏமாற்றப்பட்டோம். இதை மனதில் வைத்து அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் தாயாராகி வருகிறோம். 

2024-ம் ஆண்டு ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக ஆட்சிக்கு வரும். பா.ஜனதா முழு நாட்டை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டது. ஆனால் அதேநேரம் மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகரித்துவரும் பணவீக்கத்தால் அவர்களின் நிலைமை மோசமாகியுள்ளது. தேசிய மட்டத்தில் பா.ஜனதாவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். 

இவ்வாறு அவர் கூறினார். 

2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு கட்சிகளும் கூட்டணியை முறித்து தனித்து போட்டியிட்டன. தேர்தலுக்கு பின்பு பா.ஜனதா ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

Next Story