மேகதாது அணை கட்ட புதுச்சேரி அரசும் எதிர்ப்பு - மோடி, அமித்ஷாவுக்கு ரங்கசாமி கடிதம்


மேகதாது அணை கட்ட புதுச்சேரி அரசும் எதிர்ப்பு - மோடி, அமித்ஷாவுக்கு ரங்கசாமி கடிதம்
x
தினத்தந்தி 15 July 2021 1:05 AM GMT (Updated: 15 July 2021 1:05 AM GMT)

மேகதாது அணை கட்ட புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி,

தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட விவசாய நிலங்களுக்கு பயனளித்து வரும் நிலையில் அதை தடுக்கும் விதமாக காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிதாக அணை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பூர்வாங்க பணிகளை கர்நாடக அரசு தற்போது தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தநிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திர பிரியங்கா, காரைக்கால் பகுதி எம்.எல்.ஏ.க்களான திருமுருகன், பி.ஆர்.சிவா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக, தமிழக அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதுவை அரசு சார்பில் இதில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இதன்பின் முதல்-அமைச்சர் ரங்கசாமியின் அலுவலகத்தில் இருந்து நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதாக முன்மொழிந்ததையொட்டி புதுச்சேரி மற்றும் தமிழக அரசு ஏற்கனவே தங்களது அதிருப்தியை தெரிவித்து இருந்தது. கர்நாடக அரசு மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் பெற்று தன்னிச்சையாக மேகதாது அணை கட்ட முடிவு எடுத்துள்ளது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

எனவே கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய நீர்வள துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

Next Story