இந்தியாவில் மது பழக்கத்தால் 62 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு: லான்செட் பத்திரிகை


இந்தியாவில் மது பழக்கத்தால் 62 ஆயிரம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு: லான்செட் பத்திரிகை
x
தினத்தந்தி 16 July 2021 3:38 PM GMT (Updated: 16 July 2021 3:38 PM GMT)

இந்தியாவில் மது குடித்ததால் 62 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வில் தெரியவந்து இருக்கிறது.

புற்று நோய் பாதிப்பு

உலகளவில் புற்றுநோய் குறித்த ஆய்வறிக்கையை, ‘லான்செட் ஆன்காலஜி’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஆண்டில் உலகளவில் புதிய புற்று நோயாளிகளில், 4 சதவீதம் பேருக்கு, மது பழக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மது குடிப்பதால் வாய், உணவு குழல், இரைப்பை, கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றன. மதுவில் கலக்கும் ரசாயனங்கள் மரபணுவை சேதப்படுத்தி, ஹார்மோன் உற்பத்தியை தடுக்கின்றன. இதனால் புற்றுநோய் உண்டாவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுப்பழக்கம்

மது குடிப்பதால் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாவோர் எண்ணிக்கையில் மங்கோலியா முதலிடத்தில் உள்ளது. இங்கு புதிய புற்றுநோயாளிகளில் 10 சதவீதம் பேருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. குவைத்தில் மதுவால் புற்றுநோய் தாக்கியோர் ஒருவர் கூட இல்லை. இந்தியாவில் புதிய புற்றுநோயாளிகளில் 5 சதவீதம், அதாவது 62 ஆயிரத்து 100 பேர், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள். இந்த எண்ணிக்கை சீனாவில் 2.82 லட்சமாகவும், ஜெர்மனியில் 21 ஆயிரத்து 500 ஆகவும் உள்ளது. அமெரிக்காவில் 52 ஆயிரத்து 700 பேர், மதுவால் புற்றுநோய்க்கு ஆளாகி உள்ளனர்.

விழிப்புணர்வு

கொரோனா பிரச்சினையும் மக்களிடம் மதுப்பழக்கம் அதிகரிக்க துணை புரிந்துள்ளது. உலக நாடுகள், உடனடியாக மதுவுக்கும், புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினால் வருங்காலத்தில் பாதிப்பு குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story