ஊரடங்கு தளர்வுகள்; நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம் வேதனை


ஊரடங்கு தளர்வுகள்; நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம் வேதனை
x
தினத்தந்தி 18 July 2021 1:01 AM GMT (Updated: 18 July 2021 1:01 AM GMT)

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வேதனை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டுப்பாடுகள் மூலம் நோய்த்தொற்று ஓரளவு குறைந்து வந்த நிலையில், தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்தபிறகு, நோய் பரவலால் ஏற்பட்ட ஆபத்து குறைக்கப்பட்டது. 

இதன் காரணமாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இந்த தளர்வுகள், மீண்டும் நோய் பரவலுக்கு காரணமாக அமைந்து விடுமோ? என்று அஞ்சும் அளவுக்கு இந்தியாவில் மக்கள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக, கூகுள் சமூக இயக்கம் அளித்த தரவுகளை சுட்டிக்காட்டிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மக்கள் நடமாட்டம் குறித்து வேதனை தெரிவித்து உள்ளது. நாட்டில் சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நடமாட்டம் கணிசமாக அதிகரித்திருப்பதாக அமைச்சகம் தெரிவித்து உள்ளது. பெரும்பாலான மாவட்டங்கள் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியிருப்பதாகவும், சில மாவட்டங்கள் அதைவிட அதிக மக்கள் நடமாட்டத்தை கொண்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் பரவல், ஜூலை மாதத்தில் நாடு முழுக்க குறைந்திருந்தாலும், ஊரடங்கு தளர்வுகளால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து இருப்பது கொரோனாவை எதிர்கொள்வதில் மத்திய, மாநில அரசுகளுக்கு கூடுதல் சவாலை ஏற்படுத்தி உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story