இந்திய பத்திரிகையாளர்கள் , அரசியல்வாதிகளின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை


இந்திய பத்திரிகையாளர்கள் , அரசியல்வாதிகளின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக சர்ச்சை
x
தினத்தந்தி 19 July 2021 1:24 AM GMT (Updated: 19 July 2021 1:24 AM GMT)

இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 300-க்கும் அதிகமானோரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

இஸ்ரேலின் என்.எஸ். ஓ நிறுவன பெகாஸஸ் சாப்ட்வேர் மூலம் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ், கார்டியன் உள்ளிட்ட 17 ஊடக நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. 

இந்த ஆய்வில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் என்.ஸ்.ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்ப்தற்காக 50 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை இந்தியா, ஐக்கிய அரபு  அமீரகம், சவுதி அரேபியா, மெக்சிகோ, ஹங்கேரி பஹ்ரைன் உள்ளிட்ட 10 நாடுகளை சேர்ந்தவை என்று கூறப்படுகிறது. 

குறிப்பாக இந்தியாவை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரது செல்போன் எண்களும் பட்டியலில் உள்ளன இதில் 2 அமைச்சர்கள் 3 எதிர்க்கட்சி தலைவர்கள் 40-க்கும் அதிகமான பத்திரிகையாளர்கள், நீதிபதி ஆகியோரின் எண்களும் அடக்கம். சமூக ஆர்வலர்கள் எண்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் இந்த எண்கள் வேவு பார்க்கப்பட்டவையா என்பதை உறுதி படுத்த ஆய்வு தொடர்வதாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சட்ட விரோத செயல்களை தடுக்கும் நோக்கிலேயே சாப்ட்வேர் விற்பனை என இஸ்ரேல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசு மறுப்பு

அதேவேளையில், செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசு கடந்த காலங்களிலும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சட்டுகள் முன்வைக்கப்பட்டு உள்ளது. 

தனிநபர் ரகசியம் என்பது அடிப்படை உரிமை என்பதால் அது காக்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.  தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு அரசு நிறுவனங்களை களங்கப்படுத்தும் நோக்கில் எழுப்பட்டு இருப்பதாகவும்  மத்திய அரசு தெரிவித்துள்ளது.  மத்திய அரசு இவ்வாறு விளக்கம் அளித்துள்ள போதிலும் நாடாளுமன்றத்தில் பிரச்சினையை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.


Next Story