ஆள் இல்லா விமானம் மூலம் டெல்லி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்; உளவு துறை எச்சரிக்கை


ஆள் இல்லா விமானம் மூலம் டெல்லி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்; உளவு துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 July 2021 12:58 PM GMT (Updated: 20 July 2021 12:58 PM GMT)

ஆள் இல்லா விமானம் மூலம் டெல்லி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.



புதுடெல்லி,

நாட்டில் வருகிற ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.  இதனை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.  பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சுதந்திர தினத்திற்கு முன்பு ஆள் இல்லா விமானம் மூலம் டெல்லி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளனர் என உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ந்தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில் டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. சமீபத்தில் காஷ்மீர் பகுதிகளில் ஆள் இல்லா விமானம் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டன.  இந்த சம்பவங்கள் உளவுத்துறையின் சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

ஆபரேசன் ஜிகாத் என்ற பெயரில் பயங்கரவாதிகள் மற்றும் சமூக விரோதிகள் இந்த தாக்குதலை டெல்லியில் நடத்த கூடும் என கூறப்படுகிறது.

இதற்கேற்றாற் போன்று, உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அல் கொய்தா இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள், சுதந்திர தினத்தினை முன்னிட்டு பெரிய அளவில் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Next Story