வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் தர்ணா


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 22 July 2021 5:44 AM GMT (Updated: 22 July 2021 5:57 AM GMT)

வேளாண் சட்டங்களை எதிர்த்து ராகுல்காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்னால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு 10-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. 3 புதிய சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது.

இந்த நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இதையொட்டி மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே தினந்தோறும் போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். ஆனால் விவசாயிகளின் இந்த திட்டத்துக்கு டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. கொரோனாவை காரணம் காட்டி விவசாயிகளுக்கு இந்த போராட்டத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தங்கள் போராட்டக்களத்தை டெல்லி ஜந்தர் மந்தருக்கு மாற்ற விவசாயிகள் முடிவு செய்தனர். அதாவது வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி இன்று முதல் தினந்தோறும் ஜந்தர் மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என சம்யுக்தா கிசான் மோர்ச்சா முடிவு செய்துள்ளது.

இந்த போராட்டத்துக்காக டெல்லி சிங்கு எல்லையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களில் விவசாயிகள் ஜந்தர் மந்தருக்கு செல்ல உள்ளனர். அங்கு ‘விவசாயி நாடாளுமன்றம்’ நிகழ்ச்சியை அவர்கள் நடத்துகிறார்கள். இதற்காக தினந்தோறும் 200 போராட்டக்காரர்கள் சிங்கு எல்லையில் இருந்து ஜந்தர் மந்தர் செல்ல உள்ளதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தையொட்டி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பாராளுமன்றம் ஜந்தர் மந்தரிலிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ளது. நாங்கள் எங்கள் சொந்த நாடாளுமன்ற அமர்வுகளை அங்கு நடத்துவோம். நாங்கள் குற்றவாளிகளா? என கூறினார்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் விவசாயிகள் போராட்டம் குறித்து அவையை ஒத்திவைத்து விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்   நாடாளுமன்றத்தில் அவை ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலையின் முன்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில்  காங்கிரஸ் எம்.பி-க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணாவில் சசி தரூர், அதிரஞ்சன் சவுத்ரி, மணிஷ் திவாரி, ஜோதிமணி, திருநாவுக்கரசர், கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் உள்பட பல  எம்.பி-க்கள்  கலந்து கொண்டனர்

"விவசாயிகளை காப்பாற்றுவோம்",  "நாட்டைக் காப்பாற்றுவோம்" என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடி தர்ணாவில் காங்கிரஸ் எம்.பி-க்கள்  ஈடுபட்டுள்ளனர்.



Next Story