நிர்பயா நிதியத்தின் கீழ் ரூ.6,213 கோடி ஒதுக்கீடு; தமிழகம் ரூ.296 கோடியை பயன்படுத்தியதாக மத்திய மந்திரி தகவல்


நிர்பயா நிதியத்தின் கீழ் ரூ.6,213 கோடி ஒதுக்கீடு; தமிழகம் ரூ.296 கோடியை பயன்படுத்தியதாக மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 22 July 2021 8:48 PM GMT (Updated: 22 July 2021 8:48 PM GMT)

நிர்பயா நிதியத்தின் கீழ் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்ட நிதியில் தமிழகம் இதுவரை ரூ.296 கோடியை பயன்படுத்தி இருப்பதாக மத்திய மந்திரி தெரிவித்துள்ளார். தேசிய அளவில் ரூ.6 ஆயிரத்து 213 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.4,087 கோடி விடுவிப்பு
பெண்கள் நலன் மற்றும் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட நிர்பயா நிதியத்தின் கீழ் இதுவரை எவ்வளவு நிதி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது? எவ்வளவு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது? என்பது பற்றி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அந்த பதிலில், “பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை 2021-2022-ல் ஒதுக்கிய ரூ.500 கோடி மற்றும் பிற துறைகள் ஒதுக்கிய நிதி என மொத்தம் ரூ.6,212.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் ரூ.4,087.37 கோடி மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டது. விடுவிக்கப்பட்ட இந்த நிதியில் இதுவரை ரூ.2,871.42 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது” என ஸ்மிரிதி இரானி கூறியுள்ளார்.

 தமிழகம் தனக்கு வழங்கப்பட்ட ரூ.317.75 கோடியில் ரூ.296.62 கோடியை (உத்தரபிரதேச மாநிலத்தைவிட அதிகம்) பயன்படுத்தி இருக்கிறது. ஆந்திரமாநிலம் ரூ.112.8 கோடியில் ரூ.38.25 கோடியையும், கேரளா ரூ.54.25 
கோடியில் ரூ.32 கோடியையும் பயன்படுத்தி உள்ளன.

Next Story