மராட்டியம்: வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 140 பேர் பலி ; ஒரு லட்சம் பேர் வெளியேற்றம்


Image courtesy : IANS/Twitter
x
Image courtesy : IANS/Twitter
தினத்தந்தி 24 July 2021 8:08 AM GMT (Updated: 24 July 2021 8:08 AM GMT)

மராட்டிய மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான பிற சம்பவங்கள் காரணமாக நேற்று மாலை வரை 76 பேர் பலியாகி உள்ளனர். 59 பேர் மாயமாகி உள்ளனர்

மும்பை

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் தொடங்கிய பருவமழை கொத்து, கொத்தாக உயிர் பலி வாங்கி வருகிறது.

கடந்த சனிக்கிழமை பெய்த கனமழையால் மும்பையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து 30 பேர் பலியானார்கள்.

மும்பை மட்டுமின்றிசுற்றுப்புற மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக கடந்த 3 நாட்களாக ராய்காட், தானே, பால்கர், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் கோலாப்பூர், சாங்கிலி,சத்தாரா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இதன் காரணமாக மேற்கண்ட மாவட்டங்களில் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதற்கிடையில், மராட்டிய மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெள்ளிக்கிழமை காலை 9 மணி வரை 76 பேர் இறந்துள்ளனர் மற்றும் 59 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. மழைப்பொழிவு மாநிலத்தின் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வீடு இடிந்து விழுந்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மோசமாக பாதிக்கப்பட்ட தானே, ராய்காட், ரத்னகிரி, சதாரா, சாங்லி மற்றும் கோலாப்பூர் மாவட்டங்களில் 7,000 க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டடு உள்ளனர்.

மராட்டிய  நிவாரண மற்றும் மறுவாழ்வு மந்திரி விஜய் வதேட்டிவார் மராட்டிய மாநிலத்தில்  வெள்ளம் மற்றும் நிலச்சரிவு தொடர்பான பிற சம்பவங்கள் காரணமாக நேற்று மாலை வரை 136 பேர் பலியாகி உள்ளனர். 90,000 க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர் என  தெரிவித்துள்ளார். 

பலத்த மழை காரணமாக நேற்று முன்தினம் மாலை ராய்காட் மாவட்டம் மகாடு தாலுகா, தலாய் கிராமத்தில் உள்ள மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலையடிவாரத்தில் இருந்த சுமார் 30 வீடுகள் அடித்து செல்லப்பட்டு மண்ணோடு மண்ணாக புதைந்தன.

மழை வெள்ளத்தால் சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்பு குழுவினர் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை. கடும் போராட்டத்திற்கு பிறகு அங்கு சென்ற மீட்பு படையினர் நேற்று காலையில் மீட்பு பணியை தொடங்கினர்.

துரிதகதியில் நடந்த மீட்புபணியில் தோண்ட, தோண்ட பிணக்குவியல் மீட்கப்பட்டன. இவ்வாறு மண்ணில் உயிரோடு புதைந்து பிணமாக கிடந்த 38 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சிலர் மண்ணிற்குள் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே உயிர் பலி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

சத்தாரா மாவட்டத்தில் இருவேறு இடங்களில் நடந்த நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இதனால் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது.  ஒரே கிராமத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 47 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்களும் இக்கிராமத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ராய்கட் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 60 பேர் உயிரிழந்துள்ளனர். ராய்கட் மாவட்டம் தான் கனமழையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சதாரா, கோலாப்பூரில் பெய்த கனமழைக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேரைக் காணவில்லை. சாங்கிலி, சதாரா, கோலாப்பூர் மாவட்டங்களில் 85 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ரத்னகிரி மாவட்டத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. ரத்னகிரி மற்றும் ராய்கட் மாவட்டத்தில் மழை நீர் மாடி வரை வந்திருந்ததாக மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் தெரிவித்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரத்னகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கெத் தெஹ்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 8 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் சப்ளை இல்லாமல் இறந்துள்ளனர்.

இதுகுறித்த விசாரணைக்கு  கலெக்டர் பி என் பாட்டீல் உத்த்ரவிட்டு உள்ளார். அந்த மருத்துவமனையில் 22 நோயாளிகள் இருந்தனர், சம்பவத்திற்குப் பிறகு, மற்றவர்கள் மாற்றப்பட்டுள்ளனர் என கலெக்டர் கூறினார்.

Next Story