எம்.பி.க்கள் தொகுதி எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டம் - காங்கிரஸ் புகார்


எம்.பி.க்கள் தொகுதி எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டம் - காங்கிரஸ் புகார்
x
தினத்தந்தி 26 July 2021 11:01 AM GMT (Updated: 26 July 2021 11:01 AM GMT)

2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்த மத்தியில் அரசு திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

 காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி  தனது டுவிட்டர் பதிவில்  தமது நாடாளுமன்ற  பா.ஜ.க சகாக்கள் மூலம் கிடைத்த தகவலின்படி, அடுத்த 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு மக்களவைத் தொகுதிகள் 1000 ஆக அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். 

இதை எதற்காக செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால் மாநில சட்டப்பேரவைகளை கலைப்பது உட்பட அரசியல் சட்டம் வழங்கியுள்ள பல அதிகாரங்களை செயல்படுத்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும். அதுபோன்ற சூழலில் எண்ணிக்கையை உயர்த்தும் திட்டம் பாதிப்பை ஏற்படுத்துமா?

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 1000 ஆக உயர்த்தப்பட்டால் அதற்குள் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

புதிதாக கட்டப்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடத்தில் ஆயிரம் எம்.பி.க்கள் அமரும் வகையில் மக்களவை வடிவமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இதனை அமல்படுத்தும் முன்பு மக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

முன்னாள் ஜனாதிபதி  பிரணாப் முகர்ஜி மக்களவை மாநிலங்களவை ஆகியவற்றில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு பரிந்துரை செய்திருந்தார். 

தற்போதைய நாடாளுமன்றத்தின்  எண்ணிக்கை 2 ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர்கள் சேர்த்து 545 ஆகும். இது 55 கோடியாக மக்கள் தொகை இருந்த போது அமைக்கப்பட்டதாகும் . 

இந்தியாவின் வரலாற்று சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். நாடாளுமன்றத்தின் தற்போதைய கட்டிடம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய கட்டிடத்தை ஒட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது.

இதற்காக மத்திய விஸ்டா திட்டத்தை மத்திய உருவாக்கியுள்ளது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது.

புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.889 கோடியாகும். முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும். கிடப்பில் இருந்த இத்திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவையில் ஆயிரம் எம்.பி.க்கள் வரை அமரும் வகையில் இடவசதி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து மத்திய அரசு அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை.

Next Story