5 நாள் பயணமாக டெல்லி சென்றார் மம்தா பானர்ஜி; மோடி, எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார்


5 நாள் பயணமாக டெல்லி சென்றார் மம்தா பானர்ஜி; மோடி, எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்கிறார்
x
தினத்தந்தி 26 July 2021 5:55 PM GMT (Updated: 26 July 2021 5:55 PM GMT)

மேற்குவங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி 5 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். பிரதமர் மோடி, எதிர்க்கட்சித்தலைவர்களை அவர் சந்தித்து பேசுகிறார்.

டெல்லி பயணம்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். மேற்குவங்காள சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெற்று, முதல்-மந்திரியாக பதவி ஏற்ற அவர், டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியையும், ஜனாதிபதியையும் நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று மாநில மந்திரி சபை கூட்டம் முடிந்ததும், கொல்கத்தாவில் உள்ள போஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மம்தா பானர்ஜி, விமானம் மூலம் டெல்லி சென்றார்.

மோடியுடன் சந்திப்பு
5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பேச உள்ளார். அப்போது மோடியிடம் மாநில வளர்ச்சி குறித்து அவர் ஆலோசிப்பார் என்று தெரிகிறது. மேலும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில் அங்கும் மம்தா பானர்ஜி செல்ல இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் மம்தாவின் டெல்லி பயணத்தை விமர்சனம் செய்துள்ள மேற்குவங்க மாநில பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷ், ‘தடுப்பூசி தட்டுப்பாடு, தேர்தல் வன்முறை என பல பிரச்சினைகளில் இருந்து சற்று விடைபெறுவதற்காகவும், பிரதமரிடம் அதிக நிதி ஒதுக்க கோரிக்கை விடுக்கவும் டெல்லி சென்றுள்ளார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் பலன் அளிக்கப்போவதில்லை’ என்று கூறியுள்ளார். கடந்த தேர்தலில் (2019) பல தலைவர்களை கொல்கத்தாவுக்கு அழைத்து பிரசாரம் செய்தார். ஆனால் பெரும்பான்மையுடன் மோடி ஆட்சி அமைத்ததாக திலீப் கோஷ் கூறினார்.

Next Story