நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை - சென்னை ஐகோர்ட் உத்தரவு


நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை - சென்னை ஐகோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 27 July 2021 6:52 AM GMT (Updated: 27 July 2021 6:52 AM GMT)

நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 'ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்' காருக்கு, நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை  ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத தொகையை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டது. மேலும், வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய பங்களிப்பு, நன்கொடை அல்ல, நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் காட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், தனி நீதிபதி விதித்த தீர்ப்பை எதிர்த்தும், தான் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் விஜய் தரப்பில் மேல்முறையீடு  செய்யப்பட்டது. இந்த வழக்கில் விஜய் தரப்பில் இன்று முன்வைக்கப்பட்ட வாதத்தில், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்தவேண்டும் என்கிற உத்தரவை எதிர்க்கவில்லை, அதை மதிக்கிறோம். ரோல்ஸ் ராய் காருக்கு நுழைவு வரி செலுத்த தயாராக இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து  நடிகர் விஜய் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, நடிகர் விஜய்க்கு  ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.


Next Story