பெகாசஸ் செல்போன் உளவு விவாகாரம்: மூத்த பத்திரிகையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு


Image courtesy : thehindu.com
x
Image courtesy : thehindu.com
தினத்தந்தி 27 July 2021 7:06 AM GMT (Updated: 27 July 2021 7:06 AM GMT)

பெகாசஸ் செல்போன் உளவு விவாகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி மூத்த பத்திரிகையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்து உள்ளார்.

புதுடெல்லி

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ உளவுச் செயலியின் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்ட விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வெளியான முதல் 300 பேர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது.

பெகாசஸ் செல்போன் உளவு விவாகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. செல்போன் ஒட்டு கேட்பு சட்டவிரோதம் என்றும், அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல் என்றும், மத்திய அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்தன. இதுதொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், இரு அவைகளும் முடங்கியுள்ளது.

இந்த நிலையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அல்லது ஒய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில்  பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். இதேபோன்று ஏற்கனவே கேரள மாநில எம்.பி. எம்.எல்.சர்மா உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Next Story