உளவு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமையிலான விசாரணையை தொடங்க வேண்டும் - மம்தா பானர்ஜி


உளவு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தலைமையிலான விசாரணையை தொடங்க வேண்டும் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 27 July 2021 1:36 PM GMT (Updated: 27 July 2021 1:36 PM GMT)

பெகாசஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, இன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். மேற்கு வங்க தேர்தலுக்குப் பிறகு மம்தா பானர்ஜி முதல் முறையாக இன்று பிரதமரை சந்தித்துள்ளார். இதற்கு முன்னர் யாஸ் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஒடிசா மற்றும் மேற்குவங்கத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். அப்போது பிரதமருடனான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், புயல் சேதம் குறித்த அறிக்கையை மட்டும் அளித்துவிட்டு மம்தா பானர்ஜி புறப்பட்டுச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது நாடு முழுவதும் பெகாசஸ் உளவு விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தனது கைபேசியும் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய அரசை குற்றம் சாட்டி வரும் நிலையில், இன்று பிரதமருடனான மம்தா பானர்ஜியின் சந்திப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லிக்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலரை சந்தித்து பேசிய பின்னர், இன்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மேற்குவங்கத்துக்கு தேவையான கூடுதல் தடுப்பூசிகள், மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் மம்தா பானர்ஜி கோரியதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாகவும், கொரோனா சூழல், மாநில வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமரிடம் தெரிவித்ததாகவும் கூறினார்.

மேலும் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு மென்பொருள் மூலம், நீதித்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள், மிக உயர்ந்த பொறுப்புகளில் இருப்போர்கூட கண்காணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த மம்தா பானர்ஜி, சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் இதுபற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

Next Story