உணவு பதப்படுத்துதல் துறையில் நேரடி அன்னிய முதலீடு சரிவு - மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தகவல்


உணவு பதப்படுத்துதல் துறையில் நேரடி அன்னிய முதலீடு சரிவு - மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தகவல்
x
தினத்தந்தி 27 July 2021 4:22 PM GMT (Updated: 27 July 2021 4:22 PM GMT)

உணவு பதப்படுத்துதல் துறையில் நேரடி அன்னிய முதலீடு சரிந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நடப்பு 2020 - 21ம் நிதியாண்டில், நாட்டின் உணவு பதப்படுத்துதல் துறையில் நேரடி அன்னிய முதலீடு 57 சதவீதம் சரிவடைந்து, 2 ஆயிரத்து 926 கோடி ரூபாயாக குறைந்து உள்ளது. இது, 2019-20 ஆம் நிதியாண்டில், 6 ஆயிரத்து 734 கோடி ரூபாயாக இருந்ததாக, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல், மக்களவையில் தெரிவித்து உள்ளார். 

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;-

“மத்திய அரசு, விவசாயிகள் வருவாயை உயர்த்த, கடந்த 2016 ஆம் ஆண்டு ‘பி.எம்.கே.எஸ்.ஒய்.’ என்ற திட்டத்தை, அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ், வேளாண் மற்றும் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் துறைகள் ஊக்குவிக்கப்பட்டு, வளர்ச்சி கண்டு வருகின்றன. 

உணவு பதப்படுத்துதல் துறையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அல்லது ரிசர்வ் வங்கி அனுமதியின்றி அன்னிய முதலீட்டில் தொழில் துவங்கலாம். எனினும், அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ், அன்னிய நேரடி முதலீடு பெறும் நிறுவனம், ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இதுவரை 42 ‘மெகா’ உணவு பூங்கா, 353 குளிர் பதன பிரிவுகள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story