மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு நடப்பு நிதியாண்டில் 27% இட ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 July 2021 10:59 AM GMT (Updated: 29 July 2021 10:59 AM GMT)

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி, 

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட்டு, இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்தது. இந்த குழு ஆய்வு செய்து 2020-2021 ஆம் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.

இதனை ஏற்றுக்கொன்ற ஐகோர்ட்டு இதனை செயல்படுத்த உத்தரவிட்டது. இந்த சூழ்நிலையில், சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி, சென்னை ஐகோர்டின் உத்தரவை மத்திய அரசு அமல்படுத்தவில்லை என்று கூறி, திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில், மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 69% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க மேலும் ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் என்று அதில் கேட்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

இந்நிலையில், அகில இந்திய மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வரும் 2020 -21 கல்வி ஆண்டில் (நடப்பு கல்வியாண்டிலேயே) மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் அகில இந்திய கோட்டாவில் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கும் இந்த ஆண்டு முதல் 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் சுமார் 1,500 மாணவர்கள் இளங்கலை மருத்துவ படிப்புகளில் பயன்பெறுவர் என்றும், முதுகலை மருத்துவப் படிப்புகளில் ஆண்டுக்கு சுமார் 2,500 மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story