புதிய கல்வி கொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்; நரேந்திர மோடி பெருமிதம்


புதிய கல்வி கொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம்; நரேந்திர மோடி பெருமிதம்
x
தினத்தந்தி 29 July 2021 10:56 PM GMT (Updated: 29 July 2021 10:56 PM GMT)

புதிய தேசிய கல்வி கொள்கையில் மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டை வலிமையாக கட்டமைப்பதில் அக்கொள்கை முக்கிய பங்கு வகிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

ஓராண்டு நிறைவு
1986-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசிய கல்வி கொள்கைக்கு மாற்றாக புதிய தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு உருவாக்கியது. பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி, இந்தியாவை சர்வதேச அறிவுசார் வல்லரசாக மாற்றுவதே இக்கொள்கையின் நோக்கம் ஆகும்.புதிய தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி, நேற்று பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இதில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், சில மாநிலங்களின் முதல்-மந்திரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இளைஞர்களுக்கு சாதகம்

பிரதமர் மோடி பேசியதாவது:-
கடந்த ஓராண்டாக ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் ஆகியோர் புதிய தேசிய கல்வி கொள்கையை களத்தில் அமல்படுத்த கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.இளம் தலைமுறையினருக்கு என்ன மாதிரியான கல்வி அளிக்கிறோம் என்பதை பொறுத்துத்தான் எதிர்காலத்தில் எவ்வளவு உயரத்தை எட்டுவோம் என்பது இருக்கிறது. இந்த நாடு முற்றிலும் இளைஞர்களுக்கும், அவர்களது உணர்வுகளுக்கும் சாதகமாக இருக்கிறது என்பதற்கு புதிய கல்வி கொள்கை உத்தரவாதம் அளிக்கிறது.நாட்டை வலிமையாக கட்டமைக்கும் மாபெரும் பணியில் புதிய கல்வி கொள்கை முக்கிய பங்கு வகிக்கிறது.

தாய் மொழி
சமீபத்தில் தொடங்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு திட்டம், இளைஞர்களை எதிர்கால சவால்களை சந்திக்க உகந்தவர்களாக மாற்றும். செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பொருளாதாரத்துக்கு பாதையை திறந்து விடும்.புதிய தேசிய கல்வி கொள்கை, தாய் மொழிக்கும், மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. 8 மாநிலங்களில் உள்ள 14 என்ஜினீயரிங் கல்லூரிகள், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் என்ஜினீயரிங் கல்வியை கற்றுத்தருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story