ராஜ்குந்த்ரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டார்; மும்பை ஐகோர்ட்டில் போலீசார் தகவல்


ராஜ்குந்த்ரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டார்; மும்பை ஐகோர்ட்டில் போலீசார் தகவல்
x
தினத்தந்தி 29 July 2021 11:47 PM GMT (Updated: 29 July 2021 11:47 PM GMT)

ஆபாச படம் எடுத்து வெளியிட்ட வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டதாக ஐகோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர்.

ஜாமீன் மனு
இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து மொபைல் ஆப்களில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் பணம் சம்பாதித்தாக கூறி அவரை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கடந்த 19-ந் தேதி கைது செய்தனர்.அவரது போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்தநிலையில் ஜாமீன் வழங்ககோரி அவர் தாக்கல் செய்த மனுவை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து ராஜ்குந்த்ரா சார்பில் ஐகோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை
இந்த மனுவில் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை கைது செய்ய முறையாக சம்மனோ, கைது வாரண்டோ அனுப்பப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.ஆனால் போலீசார் தாக்கல் செய்த பதில் மனுவில், “ராஜ்குந்த்ராவை கைது செய்வதற்கு முன்பு அவருக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. 

மேலும் ஆதாரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story