எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் 11-வது நாளாக முடக்கம்
எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.
புதுடெல்லி,
இஸ்ரேலின் பெகாசஸ் மென்பொருள் மூலம் இ்ந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் செல்போன்கள் ஒட்டு கேட்க இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. இது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசின் மீது கடுமையாக குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாடாளுமன்றம் இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சிகள் இன்றும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் மீண்டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story