கர்நாடகாவில் வருகிற 23ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு

கர்நாடகாவில் வருகிற 23ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகாவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. ஆன்லைன் வழியேயான வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. இந்நிலையில், பள்ளிகள் திறப்பு பற்றி முதல்-மந்திரி பொம்மை தலைமையில் அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.
இதன் முடிவில், வருகிற 23ந்தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்காக பள்ளிகள் திறக்கப்படும் என்று முடிவானது.
கர்நாடகா முழுவதும் இரவு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி, இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு இருந்த நிலையில், தற்போது கூடுதலாக ஒரு மணிநேரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, மராட்டியம் மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் இமாச்சல பிரதேசத்தில் முதல் கட்டமாக 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதேபோன்று, பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story