மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு; மோடிக்கு மீண்டும் கடிதம்


மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு மம்தா பானர்ஜி எதிர்ப்பு; மோடிக்கு மீண்டும் கடிதம்
x
தினத்தந்தி 7 Aug 2021 4:17 PM GMT (Updated: 7 Aug 2021 4:17 PM GMT)

மத்திய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்த மசோதா தொடர்பான நடவடிக்கைகளை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு அவர் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

மின்சார திருத்த மசோதா
மின்சார சட்டம் 2003-ல் திருத்தங்களை மேற்கொண்டுள்ள மத்திய அரசு இது தொடர்பாக புதிய மசோதா ஒன்றை உருவாக்கி உள்ளது. கடந்த ஆண்டே தயாரிக்கப்பட்ட மின்சார (திருத்தம்) மசோதா 2020 என்ற இந்த மசோதாவை பல்வேறு தரப்பினரும் எதிர்த்து வருகின்றனர். குறிப்பாக புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், இந்த மின்சார சட்ட திருத்த மசோதாவையும் எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.

மாநிலங்கள் எதிர்ப்பு
இதைப்போல மத்திய அரசின் இந்த மசோதா, மாநிலங்களின் பல்வேறு உரிமைகளை பறிப்பதாக சில மாநில அரசுகளும் குற்றம் சாட்டியுள்ளன. இதில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முக்கியமானவர். இந்த மசோதாவை ரத்து செய்யுமாறு கடந்த ஆண்டே அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த மசோதா நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. எனவே இந்த மசோதா மீதான நடவடிக்கைகளை நிறுத்துமாறு மோடிக்கு மம்தா பானர்ஜி மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மக்கள் விரோத அம்சங்கள்
அதிக விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கும் மின்சார (திருத்தம்) மசோதா 2020-ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக மத்திய அரசு புதிதாக எடுத்துள்ள முயற்சிகளுக்கு மீண்டும் எனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இந்த 
கடிதத்தை எழுதுகிறேன். இந்த மசோதா கடந்த ஆண்டே தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ள மக்கள் விரோத அம்சங்களை நாங்கள் பலர் கோடிட்டுக்காட்டி இருந்தோம்.

கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும்
அதுவும் கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி நான் உங்களுக்கு (மோடி) எழுதிய கடிதத்தில் மசோதாவின் அனைத்து முக்கிய ஆபத்துகளையும் குறித்து விரிவாக விவரித்து இருந்தேன். குறிப்பாக நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை சிதைக்கும் முயற்சி இது என்பதை எடுத்துரைத்து இருந்தேன். இந்த மசோதா, மாநிலங்களின் ஒட்டுமொத்த மின்சார கட்டத்தையும், தேசிய கட்டத்துக்கு மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

வெளிப்படையான உரையாடல்
ஆனாலும் இந்த விவகாரத்தில் எங்கள் கவலைகளை கருத்தில் கொள்ளாமல் மசோதாவை மீண்டும் கொண்டு வருவதை அறிந்து நான் திகைத்துப்போனேன். உண்மையில் இந்த முறை சில கடுமையான மக்கள் விரோத அம்சங்களுடன் 
மசோதா உள்ளது. எனவே இந்த மசோதா மீதான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் இந்த விஷயத்தில் ஒரு வெளிப்படையான மற்றும் பரந்த உரையாடல் ஒன்றுக்கு விரைவில் உறுதி செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

Next Story