இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்காளதேசத்தை சேர்ந்த 10 பேர் கைது


இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்காளதேசத்தை சேர்ந்த 10 பேர் கைது
x
தினத்தந்தி 7 Aug 2021 7:23 PM GMT (Updated: 7 Aug 2021 7:23 PM GMT)

வங்காளதேசத்தில் இருந்து ஒரு சிலர் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக மேற்கு வங்காளத்துக்குள் நுழைய முயன்றனர்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காள மாநிலத்தில் வங்காளதேச நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள மாவட்டம் கூச்பேஹார். இங்குள்ள சப்ரி எல்லை சோதனைச்சாவடி அருகே நேற்று காலை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வங்காளதேசத்தில் இருந்து ஒரு சிலர் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக மேற்கு வங்காளத்துக்குள் நுழைய முயன்றனர்.

இதனை கவனித்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர்‌. ஒரு ஆண், 4 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் என மொத்தம் 10 பேரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.

இவர்கள் 10 பேரும் வங்காளதேசத்தின் குருகிராம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் சிறுவர்களை தவிர மற்ற 5 பேரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story