பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கூடுதலாக சாதிகள்: மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட மசோதா தாக்கல்


பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கூடுதலாக சாதிகள்: மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட மசோதா தாக்கல்
x
தினத்தந்தி 9 Aug 2021 10:11 PM GMT (Updated: 9 Aug 2021 10:11 PM GMT)

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கூடுதலாக சாதிகளை சேர்க்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்தன.

புதுடெல்லி, 

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், நாடாளுமன்றத்தில் 102-வது அரசியல் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு சட்டபூர்வ அந்தஸ்து அளிக்க வகை செய்கிறது.

அதே சமயத்தில், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பட்டியலில் கூடுதலாக சாதிகளை சேர்த்துக்கொள்ள மாநிலங்களுக்கு இருந்த அதிகாரம் பறிக்கப்பட்டது.

இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மே 5-ந்தேதி தீர்ப்பு அளித்தது. அதில், கூடுதலாக சாதிகளை சேர்க்க மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக கூறியது.

இதையடுத்து, மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நீர்த்துப்போக செய்யும்வகையில், அரசியல் சட்ட திருத்த மசோதா கொண்டுவர மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இதன்மூலம், ஓ.பி.சி. பட்டியலில் கூடுதலாக சாதிகளை சேர்த்துக்கொள்ள மாநிலங்களுக்கு அதிகாரம் கிடைக்கும். இந்த 127-வது அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு கடந்த வாரம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

இந்தநிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இம்மசோதா தாக்கல் செய்யப்படுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. அதுபற்றிய நிலைப்பாட்டை முடிவு செய்வதற்காக, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் 15 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் கலந்து கொண்டார். தேசியவாத காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாடி, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட 15 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

இந்த மசோதா, மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா என்பதால், அதை ஆதரிப்பது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், ‘பெகாசஸ்’ உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள் ஆகியவை பற்றி விவாதிக்கக்கோரி அமளியை தொடருவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, மக்களவையில், ‘பெகாசஸ்’ விவகார அமளிக்கிடையே, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி வீரேந்திர குமார், 127-வது அரசியல் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மசோதாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்தார். அவர் கூறியதாவது:-

இந்த மசோதா, மக்கள் நலன் சார்ந்தது என்பதால், இதை ஆதரிக்க எதிர்க்கட்சிகள் சம்மதிக்கிறோம். இதே அவையில், 102-வது அரசியல் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்தபோது, அது மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக்கூடியது என்று எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், மத்திய அரசு கேட்கவில்லை. இப்போது, அந்த தவறு சரிசெய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இது, அரசியல் சட்ட திருத்த மசோதா என்பதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால், எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவிப்பதால், மசோதா நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

Next Story