இமாசலபிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலி


இமாசலபிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் பலி
x
தினத்தந்தி 11 Aug 2021 10:38 AM GMT (Updated: 11 Aug 2021 11:57 AM GMT)

இமாசலபிரதேசத்தில் நெடுச்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் பஸ்சில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் சிக்கிக்கொண்டனர்.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலம் கின்னவூர் மாவட்டத்தில் உள்ள நெடுச்சாலையில் இன்று ஒரு பஸ் சென்றுகொண்டிருந்தது. ராம்பூர்-ஜூரி பகுதியில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தபோது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், மலைப்பகுதியில் உள்ள பாறைகள் உருண்டு சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் மீது விழுந்தது. மேலும், மண்சரிவு ஏற்பட்டு சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீதும் விழுந்தது.   

இந்த நிலச்சரிவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பஸ் மற்றும் கார் சிக்கிக்கொண்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காரில் சிக்கிய 6 பேரை பத்திரமாக மீட்டனர். 

ஆனாலும், பஸ்சில் பயணம் செய்தவர்கள் 40-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 1 நபர் உயிரிழந்துள்ளார். நிலச்சரிவால் பஸ்சில் சிக்கிக்கொண்ட 40-க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Next Story