சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்; எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்பு


சோனியா காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்; எதிர்கட்சி தலைவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Aug 2021 11:59 AM GMT (Updated: 20 Aug 2021 12:01 PM GMT)

சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 18 எதிர்கட்சிகள் இணைந்து பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் நின்றதால், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

எதிர்கட்சிகளின் இந்த ஒற்றுமையை தக்கவைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சோனியா காந்தி தலைமையில் கூட்டணி கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துள்ள கட்சிகளின் தலைவர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பெகாசஸ் விவகாரம், விலைவாசி உயர்வு, சிலிண்டர் விலையேற்றம், பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட ஆயத்தமாகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story