மக்கள் நலப்பணிகளுக்கு ஒருவர் கூட இடையூறாக இருக்க அனுமதிக்க மாட்டேன்; நிதின் கட்காரியிடம் உத்தவ் தாக்கரே உறுதி


மக்கள் நலப்பணிகளுக்கு ஒருவர் கூட இடையூறாக இருக்க அனுமதிக்க மாட்டேன்; நிதின் கட்காரியிடம் உத்தவ் தாக்கரே உறுதி
x
தினத்தந்தி 21 Aug 2021 3:47 AM GMT (Updated: 21 Aug 2021 3:47 AM GMT)

மக்கள் நலப்பணிகளுக்கு ஒருவர் கூட இடையூறாக இருக்க அனுமதிக்க மாட்டேன் என நிதின் கட்காரிக்கு, உத்தவ் தாக்கரே உறுதி அளித்து உள்ளார்.

நிதின் கட்காரி கடிதம்
மத்திய சாலை போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி சமீபத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் மராட்டியத்தில் நடந்து வரும் சாலை திட்டப்பணிகளுக்கு சிவசேனா மக்கள் பிரதிநிதிகள் இடையூறு ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டி இருந்தார்.இந்தநிலையில் நாக்பூரில் மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழா நடந்தது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மத்திய மந்திரிகள் நிதின்கட்காரி, ஹர்தீப் சிங் புரி ஆகியோர் மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர். விழாவில் நிதின் கட்காரி நேரடியாகவும், உத்தவ் தாக்கரேவும், ஹர்தீப்சிங் புரியும் மெய்நிகர் முறையில் கலந்து கொண்டனர்.

உத்தவ் தாக்கரே உறுதி

விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

நீங்கள் (நிதின் கட்காரி) இனிமையாக பேசுகிறீர்கள். ஆனால் உங்களின் கடிதம் கடுமையாக உள்ளது. நமது உறவு வித்தியாசமானது. நீங்கள் வேலை செய்வதில் உறுதியாக உள்ளீர்கள். உங்களுக்கு சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் போதனைகள் பற்றியும் தெரியும். பொது மக்கள் நல பணிகளில் ஒருபோதும் தடையாக இருக்க அனுமதிக்க மாட்டோம். மக்கள்நல பணிகளில் ஒருவர் கூட இடையூறாக இருக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்பதை உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். நாட்டில் நாக்பூரை தலைசிறந்த நகரமாக மாற்ற மத்திய அரசுடன் மாநில அரசு பணியாற்றியது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல நாக்பூரில் வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள உதவிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, நகர்புற மேம்பாட்டு துறை மந்தரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு நிதின் கட்காரி நன்றி கூறினார். இதேபோல மராட்டியத்திற்கு பெரிய திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்க மத்திய போக்குவரத்துறை தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story